செய்திகள்

தமிழகம் முழுவதும் 43 இடங்களில் ஓட்டு எண்ணிக்கை

Published On 2019-05-20 06:16 GMT   |   Update On 2019-05-20 06:16 GMT
பாராளுமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் தமிழகம் முழுவதும் 43 இடங்களில் வருகிற 23-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

சென்னை:

பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் கடந்த மாதம் 11-ந்தேதி தொடங்கி மே 19-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடந்து முடிந்து உள்ளது.

தமிழகத்தில் வேலூர் தவிர 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் கடந்த 18-ந்தேதி தேர்தல் நடை பெற்றது. 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலும் அதே நாளில் நடத்தப்பட்டது. அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நேற்று நடந்தது.

நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்பதை முடிவு செய்வதற்கான ஓட்டு எண்ணிக்கை வருகிற 23-ந்தேதி நடை பெறுகிறது. தமிழகத்தில் 43 இடங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. சென்னையில் 3 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடை பெறுகிறது.

மத்திய சென்னையில் பதிவான வாக்குகள் லயோலா கல்லூரியிலும், வட சென்னையில் பதிவான ஓட்டுகள் ராணி மேரி கல்லூரியிலும், தென் சென்னை ஓட்டுகள் கிண்டி அண்ணா பல்கலைக் கழகத்திலும் எண்ணப்படுகின்றன.

தமிழகம் முழுவதும் ஓட்டு எண்ணிக்கைக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஒரு லட்சம் போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுகிறார்கள். சென்னையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற் கொள்கிறார்கள்.

பதட்டமான ஓட்டு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஓட்டு எண்ணும் மையங்களில் துணை ராணுவ படையினர், மாநில போலீசார், சிறப்பு படை போலீசார் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து மையங்களிலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தமிழகத்தை பொறுத்த வரையில் கடந்த 18-ந்தேதி வாக்குப்பதிவு முடிவடைந்த நாளில் இருந்தே 24 மணி நேரமும் வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டன. சுழற்சி முறையில் போலீசாரும், துணை ராணுவ படையினரும் வாக்கு எண்ணும் மையங்களில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை அன்று காலை 7.30 மணிக்கு தொடங்குகிறது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும். அது முடிவடைந்ததும் மின்னணு எந்திரங்களில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி காலை 8.30 மணி அளவில் தொடங்கும்.

இதற்காக வாக்கு எண்ணும் மையங்களில் 14 மேஜைகள் வரை போடப்பட்டு இருக்கும். ஒரு கண்காணிப்பாளர், உதவியாளர், நுண் பார்வையாளர் ஆகியோரது மேற்பார்வையில் ஓட்டுகள் எண்ணப்படும்.

 


ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் வேட்பாளர்களின் முகவர்கள் பணியில் இருப்பார்கள். வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் மின்னணு எந்திரங்களை அவர்களிடம் காட்டிய பின்னரே ஓட்டு எண்ணும் பணியை தொடங்குவார்கள்.

அடுத்த 30 நிமிடங்களிலேயே முன்னணி நிலவரங்கள் தெரிய வரும். மதியம் 1 மணி அளவில் மத்தியில் ஆட்சி அமைக்கப்போவது யார் என்பது தெரிந்து விடும். இந்த தேர்தலில் வாக்குப்பதிவின் போது யாருக்கு ஓட்டு போட்டோம் என்பதை வாக்காளர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் “விவிபேட்” என்கிற ஒப்புகை சீட்டு எந்திரமும் பொருத்தப்பட்டு இருந்தது.

இந்த எந்திரத்தில் பதிவான வாக்குகளையும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான ஓட்டுகளையும் 10 சதவீதம் அளவுக்கு சரி பார்த்த பின்னரே முடிவுகள் வெளியிடப்படும். இதனால் இறுதி முடிவுகள் வெளியாவதில் சற்று தாமதம் ஏற்படவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இருப்பினும் 23-ந்தேதி இரவுக்குள் வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் தெரிய வந்து விடும் என்றே தேர்தல் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

நாடு முழுவதும் வாக்குப்பதிவுக்கு பின்னர் எடுக்கப்பட்ட கருத்து கணிப்புகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கருத்து கணிப்புகள் அனைத்தும் மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாகவே தெரிவித்து உள்ளன.

அதே நேரத்தில் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியே அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று கருத்து கணிப்புகளில் கூறப்பட்டுள்ளது. இதனால் தேர்தல் முடிவு எப்படி இருக்கும்? என்கிற எதிர்பார்ப்பு இப்போதே அதிகரிக்க தொடங்கி உள்ளது.

தமிழகத்தை பொறுத்த வரை பாராளுமன்ற தேர்தல் முடிவுகளை விட 22 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதும் அனைவரது மத்தியிலும் மிகுந்த எதிர்பார்ப்பாக உள்ளது.

ஆளும்கட்சியான அ.தி.மு.க. வெற்றி பெறுமா? இல்லை எதிர்க்கட்சியான தி.மு.க. கூடுதல் இடங்களை கைப்பற்றுமா? என்பது மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.

வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில் அரசியல் கட்சியினர் வெற்றி கொண்டாட்டத்துக்கும் இப்போதே தயாராகி வருகிறார்கள்.

பொதுமக்கள் இடையிலும் மீண்டும் பாரதிய ஜனதா ஆட்சியே அமையுமா? அல்லது மத்தியில் மாற்றம் ஏற்படுமா? என்கிற எதிர்பார்ப்பும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.

Tags:    

Similar News