செய்திகள்

பொன்பரப்பியில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் - தேர்தல் கமி‌ஷனில் திருமாவளவன் புகார்

Published On 2019-04-22 08:50 GMT   |   Update On 2019-04-22 12:03 GMT
பொன்பரப்பியில் நடந்த வன்முறை காரணமாக மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என தேர்தல் கமிஷனில் திருமாவளவன் புகார் அளித்துள்ளார். #Thirumavalavan
சென்னை:

விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் சென்னை கோட்டையில் தலைம தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்து ஒரு மனு கொடுத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பொன்பரப்பியில் 280 தலித் வாக்காளர்கள் வாக்களிக்க முடியாமல் தடுக்கப்பட்டுள்ளார்கள். இதுதொடர்பாக 95 பேர் தனித்தனியாக புகார் மனு தந்துள்ளார்கள். அதை தேர்தல் அதிகாரியிடம் கொடுத்துள்ளேன்.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 57-வது பிரிவின் படி வாக்குச்சாவடிக்கு வெளியே வன்முறை நடந்து வாக்காளர்கள் வாக்களிக்க முடியாமல் தடுக்கப்பட்டால் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும். எனவே அங்கு மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறோம். அவரும் பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணைய அதிகாரிகள் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையில் தலையிடவோ, ஊழல், முறைகேடு போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கவோ போதிய அதிகாரம் இல்லை.

காவல்துறை மற்றும் இதர அரசு நிறுவனங்களை பயன்படுத்திக் கொள்கிறது. பொன்பரப்பியில் மொத்தம் 680 தலித் வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 400 பேர் மதியம் 2 மணி வரை வாக்குப்பதிவு செய்துள்ளார்கள். அதன்பிறகு பதிவான வாக்குகள் அனைத்தும் கள்ள ஓட்டுகள்.

பொன்பரப்பியில் வன்முறைக்கு காரணமானவர்கள் பற்றி பெயர் குறிப்பிட்டவர்களில் 3 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளார்கள். இந்த சம்பவத்தில் இந்து முன்னணியினரும் சம்பந்தப்பட்டுள்ளார்கள். அவர்களது பெயரை குறிப்பிட்டும் இதுவரை கைது செய்யவில்லை.



கூட்டணி கட்சியினர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தும் அந்த சம்பவம் கண்டிக்கத்தக்கது என்று முதல்வரும், துணை முதல்வரும் கூறியதில் இருந்தே அங்கு எவ்வளவு பெரிய வன்முறை வெறியாட்டம் நடந்து இருக்கும் என்று அறிந்து கொள்ள முடியும்.

பொன்பரப்பி சம்பவத்தை கண்டித்தும் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தியும் வருகிற (24-ந்தேதி) புதன்கிழமை தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்துக்கு நான் தலைமை தாங்குகிறேன். கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். #Thirumavalavan
Tags:    

Similar News