செய்திகள்

சென்னை சாலிகிராமத்தில் குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார் விஜயகாந்த்

Published On 2019-04-18 06:14 GMT   |   Update On 2019-04-18 06:14 GMT
சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். #Vijayakanth #Loksabhaelections2019
சென்னை:

தேமுதிக தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர். அவர்களின் மகன் விஜயபிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் ஆகியோரும் வாக்களித்தனர்.

வாக்களித்த பிறகு பிரேமலதா அளித்த பேட்டியில், தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் என்றார்.

தருமபுரியில் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்குமார் வாக்களித்தார்.  திருப்பூர் மாவட்டம் மூங்கில்தொழுவு பகுதியில் பொள்ளாச்சி பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் சி. மகேந்திரன் வாக்களித்தார்.

கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கே.பி. முனுசாமி, காவேரிப்பட்டினத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். கரூர் பாராளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி பெரிய திருமங்கலம் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு செய்தார்.

திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்த நத்தம் வாக்குச்சாவடியில் பெரம்பலூர் பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் என்.ஆர். சிவபதி வாக்குப்பதிவு செய்தார்.

தென் சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியன், தமது குடும்பத்தினருடன் சென்னை நீலாங்கரையில் உள்ள புனித தோமையர் ஊராட்சி பள்ளியில் வாக்களித்தார்.

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மனோஜ்பாண்டியன் கரிசல்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.



திமுக மகளிர் அணி தலைவியும், அக்கட்சியின் தூத்துக்குடி மக்களவை தொகுதி வேட்பாளருமான கனிமொழி, தென் சென்னை மக்களவை தொகுதிக்குட்பட்ட மயிலாப்பூரில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவு செய்தார்.

கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதியின் தேமுதிக வேட்பாளர் எல்.கே.சுதீஷ், மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட விருகம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவு செய்தார். #Vijayakanth #Loksabhaelections2019
Tags:    

Similar News