செய்திகள்

திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் நிர்வாகியின் நிறுவனத்தில் வருமான வரி சோதனை

Published On 2019-04-03 07:30 GMT   |   Update On 2019-04-03 07:30 GMT
திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ஒருவரின் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். #LokSabhaElections2019 #ITRaids
திருச்சி:

பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதுதவிர, வருமான வரித்துறையும் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகிறது. அவ்வகையில் சமீபத்தில் வேலூரில் திமுக பொருளாளர் துரைமுருகனின் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

பின்னர் அவருக்கு நெருக்கமானவராக கூறப்படும் பூஞ்சோலை சீனிவாசன் என்பவருக்குச் சொந்தமான சிமெண்ட் கிடங்கில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூ.11.48 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



இந்நிலையில், திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகி ராஜாவின் ரியல் எஸ்டேட்டில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். திருச்சி மன்னார்புரத்தில் உள்ள அலுவலகத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டது. சோதனையின்போது, ரியல் எஸ்டேட் வரவு செலவு கணக்குகள் மற்றும் நிலம் சம்பந்தமான ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

முன்னதாக, பெரம்பலூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் காரில் எடுத்துச் சென்ற ரூ.2.10 கோடி பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த பணம் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக எடுத்து செல்லப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதுபற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். #LokSabhaElections2019 #ITRaids
Tags:    

Similar News