செய்திகள்

ஆசிரியர் தகுதி தேர்வு எழுத வந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது

Published On 2019-06-10 03:20 GMT   |   Update On 2019-06-10 03:20 GMT
நாகை மாவட்டம் திருமருகல் அரசு மேல் நிலைப்பள்ளியில், ஆசிரியர் தகுதி தேர்வு எழுத வந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.
திருமருகல்:

நாகை மாவட்டம் திருமருகல் அரசு மேல் நிலைப்பள்ளியில், ஆசிரியர் தகுதி தேர்வு நேற்று நடைபெற்றது. மயிலாடுதுறையை அடுத்த மணல்மேடு அருகே உள்ள உதயாதித்தமங்கலத்தை சேர்ந்த கமலக்கண்ணனின் மனைவி தேவி (வயது 29) என்பவரும் இந்த தேர்வினை எழுதினார்.

நிறைமாத கர்ப்பிணியான தேவிக்கு, தேர்வு எழுதி கொண்டிருந்தபோது திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனை அறிந்த தேர்வு மைய கண்காணிப்பு அலுவலர்கள் உடனடியாக அவரை, திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு மருத்துவ குழுவினர் முதலுதவி அளித்தனர்.

பின்னர் அவர் திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தேவிக்கு இது தான் முதல் குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது. உரிய சமயத்தில் முதலுதவி சிகிச்சையளித்து உதவிய திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினரை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டினர்.

Tags:    

Similar News