செய்திகள்

ஆசிரியர் தகுதித் தேர்வை 40,640 பேர் எழுதவில்லை - ஆசிரியர் தேர்வு வாரியம்

Published On 2019-06-09 12:51 GMT   |   Update On 2019-06-09 12:51 GMT
ஆசிரியர் தகுதித் தேர்வை 40,640 பேர் எழுதவில்லை என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
சென்னை:

மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதி தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும்.

தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) நடத்தி வருகிறது. 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களுக்கு முதல் தாள் தேர்வும், 8-ம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கு 2-ம் தாள் தேர்வும் நடத்தப்படுகிறது.

அந்த வகையில் ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு தொடர்பான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த பிப்ரவரி மாதம் 28-ந்தேதி வெளியிட்டது. கடந்த மார்ச் மாதம் 15-ந்தேதி முதல் ஏப்ரல் மாதம் 12-ந்தேதி வரை தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் கொடுக்கப்பட்டது.

அதன்படி, ஆசிரியர் தகுதி தேர்வுக்கு மொத்தம் 6 லட்சத்து 4 ஆயிரத்து 156 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அதில் முதல் தாள் தேர்வுக்கு ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 341 பேரும், 2-ம் தாள் தேர்வுக்கு 4 லட்சத்து 20 ஆயிரத்து 815 பேரும் விண்ணப்பித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

ஆசிரியர் தகுதி முதல் தாள் தேர்வு நேற்று நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 471 தேர்வு மையங்களும், சென்னையில் மட்டும் 28 மையங்களும் அமைக்கப்பட்டு இருந்தன. ஆசிரியர் தகுதிக்கான 2-ம் தாள் தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1 மணி வரை நடைபெற்றது.

இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள தகவலின்படி,

ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல் தாள் நேற்று நடைபெற்ற நிலையில், இரண்டாம் தாளுக்கான தேர்வு இன்று நடைபெற்றது.

தமிழகத்தில் 1,081 மையங்களில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வை 40,640 பேர் எழுதவில்லை. ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்த 4,20,957 பேரில் 3,80,317 பேர் தேர்வு எழுதினர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News