செய்திகள்

காரிமங்கலம் அருகே, குடும்பத்தகராறில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2019-06-06 18:16 GMT   |   Update On 2019-06-06 18:16 GMT
காரிமங்கலம் அருகே குடும்பத்தகராறில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காரிமங்கலம்:

காரிமங்கலம் ஒன்றியம் பெரியாம்பட்டி சமத்துவபுரத்தை சேர்ந்தவர் லெனின் குமார் (வயது32). தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த விஜயலட்சுமி(25) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதனால் இவர்களுக்கு நிதின்குமார் என்ற மகனும், தீபனிஸ்ரீ என்ற மகளும் உள்ளனர். லெனின்குமார் வேலைக்கு செல்லும் பணத்தை குடும்பம் நடத்த மனைவியிடம் கொடுக்காமல் மது குடித்து செலவழித்ததாக தெரிகிறது. இதனால் கணவன்-மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் உறவினர்கள், கணவன் மனைவியை சமாதானம் செய்து வைத்துள்ளனர். இதற்கிடையில் லெனின்குமார் கர்நாடக மாநிலம் ஹாசன் பகுதியில் உள்ள துணிக்கடை ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார். அங்கு ஒருமாதம் வேலை செய்த வகையில் கிடைத்த பணத்துடன் கடந்த 2-ந்தேதி சமத்துவபுரத்திற்கு வந்துள்ளார். அப்போது விஜயலட்சுமி, கணவரிடம் பணம் குறித்து கேட்டுள்ளார். ஆனால் லெனின்குமார் பணத்தை மனைவியிடம் கொடுக்காமல் கடந்த 3 நாட்களாக மதுகுடித்து செலவு செய்து வந்ததாக தெரிகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிபோதையில் இருந்த லெனின்குமார் வீட்டுக்குள் சென்று கதவை தாழ்போட்டு கொண்டு மனைவியின் சேலையால் தூக்குப்போட்டு கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த விஜயலட்சுமி கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து கதவை உடைத்து லெனின்குமாரை மீட்டனர். அப்போது அவர் இறந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்து காரிமங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஸ்குமார் மற்றும் போலீசார் லெனின்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொழிலாளி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News