செய்திகள்

கர்நாடக அரசை ‘டிஸ்மிஸ்’ செய்யக்கோரி டெல்லியில் போராட்டம்- அய்யாக்கண்ணு பேட்டி

Published On 2019-06-02 22:06 GMT   |   Update On 2019-06-02 22:06 GMT
காவிரியில் தண்ணீர் திறந்துவிட மறுக்கும் கர்நாடக அரசை ‘டிஸ்மிஸ்’ செய்யக்கோரி டெல்லியில் போராட்டம் நடத்துவோம் என்று அய்யாக்கண்ணு கூறியுள்ளார்.
திருச்சி:

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நேற்று திருச்சியில் நடந்தது. மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமை தாங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கோதாவரி-காவிரி நதிகள் இணைக்கப்படும் என்று அறிவித்ததற்கும், சிறு குறு என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்து விவசாயிகளுக்கும் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டதற்கும் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். விவசாயிகளின் வங்கி கடனை தள்ளுபடி செய்யவேண்டும் என போராடி வருகிறோம். ஆனால் இதுவரை தள்ளுபடி செய்யப்படவில்லை. 

காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடக மாநில அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. இம்மாத இறுதிக்குள் டெல்லிக்கு சென்று பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை சந்தித்து, காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடக மாநில அரசை ‘டிஸ்மிஸ்’ செய்யவேண்டும் என கோரிக்கை வைப்போம். அவர்கள் எங்களை சந்திக்க மறுத்தாலோ, கோரிக்கையை ஏற்கவில்லை என்றாலோ டெல்லியில் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம்.

தமிழகத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. மக்கள் குடிநீருக்காக தவித்து வருகிறார்கள். சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை அமல்படுத்த தீவிரம் காட்டினால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் போராட்டம் நடத்துவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News