நாராயணசாமி பிறந்தநாள்: மணக்குள விநாயகர் கோவிலில் காங்கிரசார் தங்க தேர் இழுத்தனர்
புதுச்சேரி:
புதுவை முதல்அமைச்சர் நாராயணசாமிக்கு இன்று பிறந்தநாள். 1947-ம் ஆண்டு மே 30-ந்தேதி பிறந்த அவருக்கு இன்றோடு 72 வயது பூர்த்தியாகிறது. நாராயணசாமியின் பிறந்த நாளை புதுவை மாநில காங்கிரசார் மாநிலம் முழுவதும் விமரிசையாக கொண்டாடினர்.
மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மணக்குள விநாயகர் கோவிலில் நாராயணசாமி நீடூழி வாழ வேண்டும் என வேண்டி தங்கத்தேர் இழுக்கப்பட்டது.
மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கமலக்கண்ணன், காங்கிரஸ் துணைத்தலைவர்கள் விநாயகமூர்த்தி, தேவதாஸ், பொதுச்செயலாளர்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், கருணாநிதி, தனுசு,
நிர்வாகிகள் சிவ. சண்முகம், சரவணன், காசிலிங்கம், உமாசங்கர், ஐ.என்.டி.யூ.சி. நிர்வாகிகள் ஞானசேகரன், ராதா ரெட்டியார் மற்றும் பலர் பங்கேற்றனர்.
பிறந்தநாளையொட்டி பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கினர். இதேபோல புதுவையில் உள்ள 23 தொகுதிகளிலும் வட்டார காங்கிரஸ் சார்பில் கோவில்களில் விசேஷ பூஜை, அபிஷேகம் போன்றவை நடத்தப்பட்டது. தொடர்ந்து ஏழைகளுக்கு அன்னதானமும் வழங்கினர். முதியோர் இல்லம், மன வளர்ச்சி குன்றியோர் இல்லம், ஆதரவற்றோர் இல்லம் ஆகியவற்றிலும் மதிய உணவு வழங்கினர்.