செய்திகள்

ஆறுமுகநேரி அருகே தூக்குபோட்டு பெண் தற்கொலை

Published On 2019-05-26 17:03 GMT   |   Update On 2019-05-26 17:03 GMT
ஆறுமுகநேரி அருகே பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி அருகே உள்ள கீழ சண்முகபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் பாலையா. கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி லெட்சுமி அம்மாள்(வயது 55). இவர்களது மகனுக்கு திருமணம் ஆகிவிட்டது.

இந்நிலையில் பாலையா நேற்று இரவு கடைக்கு சென்றுவிட்டு வெகுநேரம் கழித்து திரும்பி வந்தார். அப்போது வீட்டில் உள்ள ஒரு அறை மட்டும் உள்பக்கம் பூட்டியிருந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த பாலையா கதவை திறக்க முயன்றார் ஆனால் முடியவில்லை. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு லெட்சுமி சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து ஆறுமுகநேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

லெட்சுமி வயிற்று வலி காரணமாக சிகிச்சை எடுத்து வந்தார். அதனால் ஏற்பட்ட மனவருத்தத்தில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என இன்ஸ்பெக்டர் பத்திரகாளி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News