செய்திகள்
அமமுக முகவர்களின் வாக்குகள் கூட பதிவாகவில்லையே? - தேர்தல் ஆணையத்திற்கு தினகரன் கேள்வி
பல்வேறு தொகுதிகளில் எங்கள் முகவர்களின் வாக்குகள் ஒன்றுகூட பதிவாகவில்லையே ஏன் என அ.ம.மு.க. பொது செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை:
அ.ம.மு.க. பொது செயலாளர் டிடிவி தினகரன் அடையாறில் உள்ள வீட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பாராளுமன்றம் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல்களில் வெற்றியை எதிர்பார்த்தோம், ஆனால் கிடைக்கவில்லை. மக்கள் வழங்கிய தீர்ப்பை ஏற்கிறோம்.
சுமார் 300 வாக்குச்சாவடிகளில் அ.ம.மு.க.விற்கு பூஜ்ஜிய வாக்குகளே பதிவாகி உள்ளன. இதற்கு தேர்தல் ஆணையம் தான் பதில்கூற வேண்டும். அ.ம.மு.க. முகவர்களின் வாக்குகள் கூட பதிவாகவில்லையே, அவர்களின் வாக்குகள் எங்கே போனது..?
பல வாக்குச்சாவடிகளில் அ.ம.மு.க.வுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே? 10 பேர் அ.ம.மு.க.வை விட்டுச் செல்வதால் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை.
தேர்தலுக்கு தேர்தல் மக்களின் மனநிலை மாறும். எனவே பொறுத்திருந்து பாருங்கள். தேர்தல் தோல்வி குறித்து ஆராய வேண்டிய அவசியம் இல்லை, எதிர்காலத்தில் வெற்றி பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம் என தெரிவித்துள்ளார்.