செய்திகள்

திமுக எம்.பி.க்கள் குழு தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு செய்யப்படுவாரா?

Published On 2019-05-25 08:58 GMT   |   Update On 2019-05-25 08:58 GMT
முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலுவுக்கு பாராளுமன்ற திமுக எம்.பி.க்கள் குழு தலைவர் பதவி வழங்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னை:

பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. 37 இடங்களை தி.மு.க. கூட்டணி கைப்பற்றியது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ரவிக்குமார், ம.தி.மு.க.வை சேர்ந்த கணேசமூர்த்தி, ஐ.ஜே.கே. தலைவர் பாரிவேந்தர், கொங்குநாடு மக்கள் கட்சியை சேர்ந்த சின்ராஜ் ஆகிய 4 பேர் உள்பட மொத்தம் 23 பேர் உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.

இதன் மூலம், பாராளுமன்றத்தில் 3-வது பெரிய கட்சியாக தி.மு.க இடம் பிடித்துள்ளது. காங்கிரசுக்கு அடுத்த இடத்தில் தி.மு.க. இருப்பதால் பாராளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்களுக்கு எதிர்க்கட்சி வரிசையில் முக்கியத்துவம் கிடைக்கும் நிலை உள்ளது.

இந்த நிலையில் தி.மு.க. சார்பில் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள எம்.பி.க்கள் கூட்டம் இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது. புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள எம்.பி.க்கள் அனைவரும் பங்கேற்கிறார்கள். கூட்டத்தில் பாராளுமன்ற தி.மு.க. எம்.பி.க்கள் குழு தலைவர் தேர்ந்து எடுக்கப்படுகிறார்.

இதுவரை, டெல்லி மேல் சபையில் தி.மு.க. எம்.பி.க்கள் குழு தலைவராக கனிமொழி செயல்பட்டார். தமிழக பிரச்சினைகளுக்கு அழுத்தமாக குரல் கொடுத்தார். இன்று நடைபெறும் எம்.பி.க்கள் கூட்டத்தில் பாராளுமன்ற தி.மு.க. எம்.பி.க்கள் குழு தலைவராக கனிமொழி தேர்ந்து எடுக்கப்படுவாரா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது.



ஆனால் முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு கட்சியின் மூத்த தலைவர். பாராளுமன்றத்தில் நீண்ட அனுபவம் உள்ளவர். எனவே டி.ஆர்.பாலுவுக்கு பாராளுமன்ற தி.மு.க. எம்.பி.க்கள் குழு தலைவர் பதவி வழங்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டி.ஆர்.பாலு பாராளுமன்ற தி.மு.க. எம்.பி.க்கள் குழுவின் தலைவராக தேர்வு செய்யப்பட்டால் கனிமொழிக்கு துணைத் தலைவர் பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது ஆ.ராசாவும் இந்த போட்டியில் இருக்கிறார்.
Tags:    

Similar News