செய்திகள்

நெற்குப்பை அருகே 2 கோவில்களில் உண்டியல்கள் கொள்ளை

Published On 2019-05-24 15:24 GMT   |   Update On 2019-05-24 15:26 GMT
நெற்குப்பை அருகே 2 கோவில்களில் உண்டியல்களை மர்ம மனிதர்கள் உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெற்குப்பை:

சிவகங்கை மாவட்டம், நெற்குப்பை அருகே உள்ளது பரியாமருதுபட்டி. இங்கு புகழ் பெற்ற சேவுகமூர்த்தி ஆலயம் உள்ளது. இந்த கோவிலுக்கு சுற்று வட்டார மக்கள் தினமும் வந்து காணிக்கை செலுத்தி வழிபாடு செய்வது வழக்கம்.

இன்று காலை கோவிலுக்கு வந்த பக்தர்கள் சுவருடன் கூடிய உண்டியல் பெயர்த்து எடுக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து நெற்குப்பை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் அரங்கநாயகி, சப்-இன்ஸ்பெக்டர் வினோத், தனி பிரிவு போலீஸ்காரர் சரவணன் ஆகியோர் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

இதில் கோவிலில் உடைத்து எடுக்கப்பட்ட உண்டியல் அருகே உள்ள கண்மாய்க்கரையில் கிடப்பது தெரியவந்தது.

யாரோ மர்ம மனிதர்கள் காம்பவுண்டு சுவர் ஏறிக்குதித்து கோவிலுக்குள் வந்துள்ளனர். அவர்கள் உண்டியலை பெயர்த்து எடுத்து வெளியே கொண்டு சென்று பணத்தை எடுத்து விட்டு கண்மாய்க்கரையில் உண்டியலை வீசிச் சென்றிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

இது குறித்து கோவில் தர்மகர்த்தா ஜெய்கணேஷ் புகார் செய்தார். அதன் அடிப்படையில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே அந்தப் பகுதியில் உள்ள நம்பர் பிள்ளையார் கோவிலிலும் உண்டியல் திருடப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கும் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News