பெரியபாளையம் அருகே சாலை தடுப்பில் கார் மோதியது - கணவர் கண் எதிரே மனைவி பலி
பெரியபாளையம்:
சென்னை பெரம்பூரைச் சேர்ந்தவர் தர்மேந்திரா (வயது 39). இவரது மனைவி பெயர் ஜோதி பிரியா (34).
பிரியாவின் தாய்வீடு ஆந்திர மாநிலம் நகரியில் உள்ளது. அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தர்மேந்திரா தனது மனைவியுடன் காரில் சென்று இருந்தார். நிகழ்ச்சி முடிந்த உடன் சென்னை திரும்பினார்கள். தர்மேந்திரா காரை ஓட்டி வர முன்னிருக்கையில் ஜோதி பிரியா அமர்ந்து வந்தார்.
சென்னை தேசிய நெடுஞ் சாலையில் பெரியபாளையத்தை அடுத்த தானா குளம் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது கார் தர்மேந்திராவின் கட்டுப்பாட்டை இழந்த தாறுமாறாக ஓடியது. சாலை தடுப்பில் பயங்கர சத்தத்துடன் மோதியது.
இந்த விபத்தில் முன்னிருக்கையில் அமர்ந்து இருந்த ஜோதி பிரியா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். தர்மேந்திரா படுகாயமடைந்தார்.
தகவல் அறிந்த பெரியபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரா தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை செய்தனர்.
ஜோதி பிரியாவின் உடல் பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. படுகாயமடைந்த தர்மேந்திரா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.