செய்திகள்

முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் 1 கிலோ வெள்ளிப்பொருட்கள், ரூ.25 ஆயிரம் திருட்டு

Published On 2019-05-20 16:55 GMT   |   Update On 2019-05-20 16:55 GMT
கண்ணமங்கலம் அருகே முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் 1 கிலோ வெள்ளிப்பொருட்கள் மற்றும் ரூ.25 ஆயிரத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் அருகே உள்ள காட்டுக்காநல்லூர் காலனியை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 52). முன்னாள் ராணுவவீரர். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு வங்கியில் வணிக தொடர்பாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வரலட்சுமி ஆசிரியையாக உள்ளார். இவர்களுக்கு அனுஷா என்ற மகளும், அவினாஷ் என்ற மகனும் உள்ளனர். அவினாஷ் பெங்களூருவில் தங்கி வேலைபார்த்து வருகிறார்.

அன்பழகன் தனது மனைவி மற்றும் மகளுடன் 2 நாட்களுக்கு முன்பு அவினாசை பார்க்க பெங்களூருவுக்கு சென்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர்கள் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 1 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.25 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. மேலும் வீட்டில் இருந்த சில ஆவணங்களையும் மர்மநபர்கள் திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.

இது குறித்து கண்ணமங்கலம் போலீஸ் நிலையத்தில் அன்பழகன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். தடய அறிவியல் துறையை சேர்ந்த துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தர்ராஜும் அங்கு வந்து கதவு மற்றும் பீரோவில் பதிவாகியிருந்த மர்மநபர்களின் கைவிரல் ரேகைகளை பதிவு செய்தார்.

அதன் அடிப்படையில் திருட்டுசம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் பழைய குற்றவாளிகளா? என்ற கண்ணோட்டத்தில் போலீசார் விசாரணை நடத்தி அவர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
Tags:    

Similar News