செய்திகள்

தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் மறுவாக்குப்பதிவு - 8 வாக்குச்சாவடிகளில் 89.67 சதவீதம் ஓட்டுகள் பதிவு

Published On 2019-05-20 16:11 GMT   |   Update On 2019-05-20 16:11 GMT
தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் 8 வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நேற்று விறுவிறுப்பாக நடந்தது. 89.67 சதவீதம் ஓட்டுகள் பதிவானது.
தர்மபுரி:

தர்மபுரி பாராளுமன்ற தேர்தல் மற்றும் அரூர்(தனி), பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் மாதம் 18-ந்தேதி நடைபெற்றது. இதனிடையே தர்மபுரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் சில பகுதிகளில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவின்போது முறைகேடுகளும், அத்துமீறல்களும் நடைபெற்றதாக தி.மு.க. சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட டி.அய்யம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் எண் 181, 182, நத்தமேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் எண் 192, 193, 194, 195, ஜாலிப்புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் எண் 196, 197 என மொத்தம் 8 வாக்குச்சாவடிகளில் மறுஓட்டுப்பதிவு நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதன்படி இந்த வாக்குச்சாவடிகளில் நேற்று மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. இங்கு 3,074 ஆண் வாக்காளர்களும் 2,985 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 6059 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் கொளுத்தும் வெளிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்கை பதிவு செய்தனர். இவர்கள் தர்மபுரி பாராளுமன்ற தேர்தலுக்கு ஒரு வாக்கும், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு ஒரு வாக்கும் என 2 வாக்குகளை பதிவு செய்தனர்.

இதையொட்டி 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பாராளுமன்ற தேர்தலின் போது இடது கையின் ஆள்காட்டி விரலில் மை வைக்கப்பட்டு இருந்தது. தற்போது மீண்டும் மறுவாக்குப்பதிவு நடைபெற்றதால் ஓட்டுப்போட்ட வாக்காளர்களுக்கு நடுவிரலில் மை வைக்கப்பட்டது. வாக்குச்சாவடிகளில் வெப்கேமராக்கள் பொருத்தப்பட்டு முழுமையாக வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் வாக்காளர்கள் மறு ஓட்டுப்பதிவின்போது செல்போனை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டது.

வாக்குச்சாவடிகளை பாராளுமன்ற பொதுத்தேர்தல் பார்வையாளர் தேபேந்திரகுமார் ஜெனா, கலெக்டர் மலர்விழி, போலீஸ் டி.ஐ.ஜி. செந்தில்குமார், போலீஸ் சூப்பிரண்டு ராஜன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. 6,059 வாக்காளர்கள் கொண்ட இந்த 8 வாக்குச்சாவடியிலும் 5,433 பேர் ஓட்டு போட்டனர். இது 89.67 சதவீதம் ஆகும்.

டி.அய்யம்பட்டி வாக்குச்சாவடியில் வாக்களிக்க காலதாமதம் ஏற்படுவதாக கூறி அலுவலர்களிடம் வாக்காளர்கள் வாக்குவாத்தில் ஈடு பட்டனர். அவர்களை போலீசார் சமரசம் செய்தனர். ஜாலிப்புதூர் பகுதியில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் அதிக அளவில் திரண்டு இருந்தனர். தகவல் அறிந்த கூடுதல் சூப்பிரண்டு மணிகண்டன் அதிரடிப்படை போலீசாருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். பின்னர் அங்கு திரண்டு இருந்த கட்சி நிர்வாகிகளை கலைந்து செல்லுமாறு அவர் அறிவுறுத்தினார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்தவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News