செய்திகள்
தஞ்சை அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல்
தஞ்சை அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சை-திருச்சி சாலையில் உள்ள முன்னையம்பட்டி பகுதியில் வல்லம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் மற்றும் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக ஒரு லாரி வந்து கொண்டிருந்தது.
அப்போது போலீசாரை பார்த்ததும் லாரி டிரைவர் சற்று முன்னதாகவே லாரியை நிறுத்தினார். பின்னர் அவர் மற்றும் லாரியில் இருந்த மற்றொரு நபர் லாரியில் இருந்து கீழே குதித்து மின்னல் வேகத்தில் தப்பி ஓடி விட்டனர். சந்தேகம் அடைந்த போலீசார் லாரியை சோதனையிட்டனர். அப்போது லாரியில் மணல் இருப்பதை கண்டுபிடித்தனர். அந்த மணல் கடத்தி வரப்பட்டது என்பது தெரிய வந்தது.
இதையடுத்து லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவர் மற்றும் அவருடன் வந்தவர் யார்? என்று விசாரணை நடத்தி அவர்களை தேடி வருகின்றனர்.