செய்திகள்
தளி அருகே மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் பலாத்காரம்- போலீசார் விசாரணை
தளி அருகே மனநிலை பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை அடுத்த தளி அருகே உணசிநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகப்பா. இவரது மனைவி திம்மக்கா.
இவர்களுக்கு சுமார் 16 வயது மதிக்க ஒரு பெண் உள்ளார். மனநிலை பாதிக்கப்பட்ட அந்த சிறுமி வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி ஆவார். இந்த நிலையில் சிறுமிக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் போனதாக கூறப்படுகிறது. இதனால் அந்த சிறுமியை அவரது தாய் திம்மக்கா கும்மளாபுரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சை அளிப்பதற்காக அழைத்து சென்றார்.
அங்கு சிறுமிக்கு டாக்டர்கள் முதலுதவி அளித்தனர். பின்னர் சிறுமியை பரிசோதித்த பார்த்தபோது அவர் 6 மாத கர்ப்பிணியாக இருக்கிறார் என்று டாக்டர் தெரிவித்தனர். இதனை கேட்டு திம்மக்கா அதிர்ச்சி அடைந்தார். வாய் பேச முடியாத சிறுமியை மர்ம நபர் யாரோ பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இது குறித்து திம்மக்கா தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலைவாணி வழக்குபதிவு செய்து சிறுமியை யாராவது ஆசைவார்த்தை கூறி கற்பழித்தனரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.