செய்திகள்

தவளக்குப்பம் அருகே தொழிலாளி தீக்குளித்து தற்கொலை

Published On 2019-05-18 10:15 GMT   |   Update On 2019-05-18 10:15 GMT
தவளக்குப்பம் அருகே மதுகுடித்து விட்டு வந்ததை மனைவி கண்டித்ததால் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

பாகூர்:

தவளக்குப்பம் அருகே ஆண்டியார்பாளையம் காலனியை சேர்ந்தவர் வீரப்பன் (வயது57). பிளம்பராக வேலைசெய்து வந்தார். இவருக்கு ஜெயா என்ற மனைவியும் 3 மகள்கள் உள்ளனர். இதில் 2 மகள்களுக்கு திருமணமாகி விட்ட நிலையில் ஒரு மகளுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வந்தது.

இதற்கிடையே வீரப்பன் அடிக்கடி வேலைக்கு செல்லாமல் மதுகுடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இதனை அவரது மனைவி ஜெயா கண்டிக்கும் போதெல்லாம் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டி வந்தார்.

இந்த நிலையில் நேற்றும் வீரப்பன் வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது அவரது மனைவி ஜெயா மகளுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில் இதுபோன்று வேலைக்கு செல்லாமல் மதுகுடித்துவிட்டு வந்தால் திருமணத்தை எப்படி நடத்துவது என்று கண்டித்தார்.

இதையடுத்து வீரப்பன் தற்கொலை செய்து கொள்ள போவதாக தெரிவித்தார். வழக்கம்போல் கணவர் மிரட்டுவதாக எண்ணி ஜெயா வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டார். அப்போது திடீரென வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து உடலில் ஊற்றி வீரப்பன் தீவைத்து கொண்டார்.

உடல் முழுவதும் தீபரவியதால் வலியால் வீரப்பன் அலறி துடித்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து தீயை அணைத்து வீரப்பனை சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே வீரப்பன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் நியூட்டன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News