செய்திகள்

சிறுமி பாலியல் பலாத்காரம் - மின்துறை ஊழியர் கைது

Published On 2019-05-16 06:51 GMT   |   Update On 2019-05-16 06:51 GMT
புதுவை அருகே 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மின்துறை ஊழியரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகூர்:

தவளக்குப்பம் அருகே அபிஷேகப்பாக்கத்தை சேர்ந்தவர் வீரய்யன். இவரது மகன் வினோத் (வயது 26). மின்துறை ஊழியரான இவர் வீடு, வீடாக சென்று மின் மீட்டர் ரீடிங் கணக்கெடுத்து பில் போடும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

அதன்படி வினோத் நேற்று பாகூர் அருகே ஒரு கிராமத்தில் வீடுகளில் மீட்டர் ரீடிங் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டார். அங்குள்ள ஒரு வீட்டில் வினோத் மின் மீட்டர் ரீடிங் எடுத்தார். அப்போது அந்த வீட்டில் 9 வயது சிறுமி மட்டும் இருப்பதை தெரிந்து கொண்டார்.

சிறுமியிடம் குடிக்க தண்ணீர் வேண்டும் என்று வினோத் கேட்டார். அந்த சிறுமி தண்ணீர் எடுத்து வர வீட்டின் உள்ளே சென்றார்.

அப்போது பின் தொடர்ந்து சென்ற வினோத் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். அந்த சிறுமி அலறல் சத்தம் போட்ட போது, யாரிடமாவது இது பற்றி கூறினால் கொலை செய்து விடுவதாக சிறுமியை மிரட்டி விட்டு வினோத் சென்று விட்டார்.

சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்த பெற்றோரிடம் நடந்த விவரத்தை கூறி சிறுமி அழுதாள். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியை மீட்டு ராஜீவ்காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அந்த சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பாகூர் போலீசில் புகார் செய்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகணேஷ், சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆகியோர் விசாரணை நடத்தினர். பின்னர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வினோத் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.

இதற்கிடையே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மின்துறை ஊழியரை உடனடியாக கைது செய்யக்கோரி உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று காலை பாகூர்- கரிக்கலாம்பாக்கம் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் பாகூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால், கிராம மக்கள் அதனை ஏற்கவில்லை. சம்பந்தப்பட்ட மின்துறை ஊழியரை கைது செய்தால் மட்டுமே மறியலை கைவிடுவோம் என கூறி தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மின்துறை ஊழியர் வினோத்தை கைது செய்து விசாரணை நடத்துவதாக போலீசார் தெரிவித்தனர். ஆனால், அதனை பொதுமக்கள் நம்பவில்லை.

இதையடுத்து போலீசார் கைது செய்யப்பட்ட வினோத்திடம் விசாரணை நடத்துவது குறித்து செல்போனில் காட்டினர். அதன் பிறகே பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.

கைது செய்யப்பட்ட வினோத்திடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News