புதுவை அருகே ஆன்-லைன் மூலம் 3 நம்பர் லாட்டரி விற்ற 3 பேர் கைது
சேதராப்பட்டு:
புதுவையை அடுத்த தமிழக பகுதியான பட்டானூரில் கொட்டகை அமைத்து ஒரு கும்பல் ஆன்-லைன் மூலம் தடை செய்யப்பட்ட 3 நம்பர் லாட்டரி சீட்டுகள் விற்பதாக ஆரோவில் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து கோட்டக் குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு அஜய்தங்கம் உத்தரவின் பேரில் ஆரோவில் போலீசார் அப்பகுதியில் சாதாரண உடையில் நின்று கண்காணித்தனர்.
அப்போது அந்த கொட்டகையில் கூட்டம், கூட்டமாக சிலர் வந்து செல்வது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அந்த கொட்டகையில் அதிரடியாக புகுந்தனர்.
அப்போது அங்கு ஆன்- லைன் மூலம் 3 நம்பர் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் திருச்சி முசிறியை சேர்ந்த விக்னேஸ்வரன் (வயது 27), பட்டானூரை சேர்ந்த சுந்தர் என்ற தக்காளி சுந்தர் மற்றும் திலாஸ்பேட்டையை சேர்ந்த சரவணன் (48) என்பது தெரிய வந்தது.
மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் இந்த லாட்டரி விற்பனையை கருவடிகுப்பத்தை சேர்ந்த சரவணன் மற்றும் அவரது நண்பர்கள் வில்லியனூர் குமார், ராஜ்குமார் ஆகி யோர் நடத்தி வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து விக்னேஸ் வரன், சுந்தர், சரவணன், ஆகிய 3 பேரையும் போலீ சார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து லாட்டரி விற்பனை பணம் ரூ.34 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
மேலும் கருவடிகுப்பத்தை சேர்ந்த சரவணன், குமார், ராஜ்குமார் ஆகிய 3 பேரையும் தேடி வருகிறார்கள்.