செய்திகள்

திண்டுக்கல் மாவட்டத்தில் ஆதார் புகைப்படம் எடுக்க 11 பள்ளிகளில் மையம்

Published On 2019-05-11 08:53 GMT   |   Update On 2019-05-11 08:53 GMT
திண்டுக்கல் மாவட்டத்தில் ஆதார் புகைப்படம் எடுக்க 11 பள்ளிகளில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
திண்டுக்கல்:

மத்திய மாநில அரசுகளின் கல்வி ஊக்கத்தொகை மற்றும் நலத்திட்டங்கள் பெற ஆதார் அட்டை முக்கிய ஆவணமாக உள்ளது. குறிப்பாக மாணவர்களுக்கு உதவித்தொகை பெறுவதற்கு ஆதார் அட்டை கட்டாயம் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உதவிகள் பெறும் மாணவர்கள் இணையதளத்தில் தங்களது விபரங்களுடன் ஆதார் எண்ணையும் பதிவேற்றம் செய்து வருகின்றனர். அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களின் ஆதார் அட்டை நகல் பெறப்படுகிறது. ஆதார் அட்டை பெற கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு புகைப்படம் எடுப்பவர்கள் வி.ஏ.ஓ.விடம் சான்றுபெற வேண்டி உள்ளது. இதனால் மாணவர்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதை தவிர்க்கும் வண்ணம் பள்ளிகளில் மையங்கள் அமைத்து ஆதார் அட்டைக்கு புகைபடம் எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் 11 மையங்கள் அமைக்கப்பட உள்ளது. இதற்காக புகைப்பட கருவி, கருவிழி பதிப்பு கருவிகள், படிவங்கள் போன்றவை வந்துள்ளன.

அடுத்த மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டதும் ஆதார் மையம் அமைய உள்ளது. அதன்பின்னர் பள்ளி மாணவ-மாணவிகள் இங்கு வரவழைக்கப்பட்டு ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Tags:    

Similar News