செய்திகள்
புதுவை முதலியார் பேட்டை டிரைவர் கொலையில் மேலும் 2 பேருக்கு தொடர்பு
புதுவை முதலியார் பேட்டை லாரி டிரைவர் கொலையில் மேலும் 2 பேருக்கு தொடர்பு உள்ளதால் அவர்களை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரி:
புதுவை முதலியார் பேட்டை 100 அடி சாலை சாக்கடை கால்வாயில் நேற்று முன்தினம் சாக்கு மூட்டையில் ஆண் பிணம் ஒன்று கிடந்தது. அது, நெல்லித்தோப்பு கஸ்தூரிபாய் நகரை சேர்ந்த லாரி டிரைவர் கமலக்கண்ணன் என்பது தெரியவந்தது. கமலக்கண்ணனை அவரது மனைவி ஸ்டெல்லா கொலை செய்து சத்தியா நகரை சேர்ந்த ரவுடி தமிழ் மணி உதவியுடன் பிணத்தை அங்கு கொண்டு வந்து போட்டது தெரியவந்தது.
இதையடுத்து ஸ்டெல்லாவை போலீசார் கைது செய்தனர். தமிழ்மணி தலைமறைவாகி விட்டார். அவரை தேடி வருகிறார்கள். இந்த நிலையில் பிணத்தை மறைப்பதற்கு தேங்காய்திட்டை சேர்ந்த ஒருவரும், மற்றும் ஒருவரும் உதவியாக இருந்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பிணத்தை முதலில் வீட்டில் இருந்து ஆட்டோவில் எடுத்து வந்துள்ளனர். பின்னர் ஸ்கூட்டியில் ஏற்றி கால்வாயில் போட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள 3 பேரையும் பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே கமலக்கண்ணனை அவரது மனைவி கொலை செய்ததில் வேறு சிலருக்கும் தொடர்பு இருக்கலாம் என கருதப்படுகிறது. கமலக்கண்ணன் குடிக்கும் மதுவில் மனைவி விஷத்தை கலந்து இருந்ததாகவும், அதை குடித்து மயங்கி கிடந்த அவரை காலால் மிதித்து கொன்றதாகவும் தெரிய வந்துள்ளது. அதுபற்றியும் விசாரித்து வருகிறார்கள்.