செய்திகள்
பேக்கரியில் ரூ.6 லட்சம் திருட்டு- பக்கத்து வீட்டு வாலிபர் கைது
புதுவை பேக்கரியில் ரூ.6 லட்சத்தை திருடிய பக்கத்து வீட்டு வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:
புதுவை உழவர்கரை ரங்காநகர் 5-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பெருமாள் (வயது 48). இவர் மூலகுளம் எம்.ஜி.ஆர். நகரில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் ஏற்கனவே 2 முறை கூரை ஓட்டை பிரித்து உள்ளே நுழைந்து யாரோ பணத்தை திருடி சென்றிருந்தனர்.
இந்த நிலையில் நேற்றும் யாரோ கூரை வழியாக நுழைந்து அங்கிருந்த நகை - பணத்தை திருடி சென்றிருந்தனர்.
இதுபற்றி ரெட்டியார் பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்- இன்ஸ்பெக்டர் வீரபத்திரன் வழக்கு பதிவு செய்து விசாரித்தார். இந்த கடையில் சி.சி.டி.வி. கேமரா வைக்கப்பட்டு இருந்தது. அதில் உள்ள காட்சிகளும் அழிக்கப்பட்டு இருந்தன.
இந்த நிலையில் பக்கத்து வீட்டை சேர்ந்த மதியழகன் மீது போலீசாருக்கு சந்தேகம் வந்தது. ஏழ்மை நிலையில் உள்ள அவர், விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் வாங்கி வைத்து இருந்தார். எனவே, போலீசாருக்கு சந்தேகம் வந்து அவரிடம் விசாரித்தனர். அதில் அவர் தான் திருடன் என்பது தெரிய வந்தது.
ஐ.டி.ஐ. படித்து இருந்த அவர் வேறு வேலைக்கு எதுவும் செல்லாமல் திருடுவதை தொழிலாக கொண்டு இருந்தார். அந்த கடையில் இருந்து இதுவரை ரூ. 5 லட்சத்து 78 ஆயிரம் திருடி இருந்தார்.
அதில், ஒரு பகுதி பணத்தை கொண்டு தங்க நகைகளும் வாங்கி இருந்தார். அவற்றையும் போலீசார் கைப்பற்றினார்கள்.