செய்திகள்

தஞ்சையில் கலெக்டர் அலுவலகம் முன்பு மனைவியுடன் கேட்டரிங் உரிமையாளர் தீக்குளிக்க முயற்சி

Published On 2019-05-06 10:30 GMT   |   Update On 2019-05-06 10:30 GMT
கலெக்டர் அலுவலகம் முன்பு கேட்டரிங் உரிமையாளர் தனது மனைவியுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர்:

தஞ்சை மானோஜிப் பட்டியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 33). கேட்டரிங் தொழில் நடத்தி வருகிறார். இவரது மனைவி கனகா.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஒரு கொலை வழக்கு தொடர்பாக மருத்துவக்கல்லூரி போலீசார், வெங்கடேசனை விசாரித்தனர். அப்போது அவரை நடுரோட்டில் வைத்து விசாரணை செய்ததால் அவர் மிகவும் வேதனை அடைந்து வந்தார். பின்னர் போலீசார் அவரை விசாரணை மட்டும் செய்து விட்டு சென்று விட்டனர்.

இந்த நிலையில் போலீசாரின் விசாரணையால் மன உளைச்சலுக்கு ஆளான அவர், இந்த சம்பவம் பற்றி போலீஸ் உயர் அதிகாரிகளை சந்தித்து முறையிட்டார். அப்போது தன்னிடம் விசாரணை நடத்திய போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் செய்தார். ஆனால் இதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என கூறப்படுகிறது. இதனால் வெங்கடேசன், தொடர்ந்து மனவேதனையில் இருந்து வந்தார். மேலும் போலீசாரின் விசாரணையால் அவரது தொழிலும் முடங்கி போனது.

இந்த நிலையில் இன்று காலை வெங்கடேசன், தனது மனைவி கனகாவுடன் தஞ்சை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் கலெக்டர் அலுவலகம் முன்பு திடீரென தான் பாட்டிலில் கொண்டு வந்த மண்எண்ணையை எடுத்து மனைவி உடலில் ஊற்றினார். பிறகு தனது உடலிலும் மண்எண்ணையை ஊற்றிக் கொண்டார்.

இதை அங்கு பாது காப்புக்கு நின்ற போலீசார் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே வெங்க டேசனையும், கனகாவையும் மீட்டு, அவர்களது உடலில் தண்ணீரை ஊற்றினர். பின்னர் அவர்களை விசாரணைக்காக தஞ்சை தமிழ் பல்கலைக்கழக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News