5-ந்தேதி வணிகர் பேரமைப்பு மாநாடு: மாவட்ட தலைவர் என்.டி.மோகன் தகவல்
சென்னை, மே. 3-
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. ஏ.சி. மைதானத்தில் 5-ந் தேதி மாநாடு நடத்தப்படுகிறது.
இதில் தென்சென்னை கிழக்கு மாவட்டத்தில் இருந்து ஏராளமான வியாபாரிகள் குடும்பபத்துடன் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இதுபற்றி மாவட்டத் தலைவர் என்.டி.மோகன் கூறியதாவது:-
இந்த ஆண்டு ராயப்பேட்டையில் நடைபெறும் 36-வது வணிகர் தின மாநில மாநாடு இந்திய வணிகர் எழுச்சி மாநாடாக நடைபெறுவதால் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரம ராஜா, பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு, பொருளாளர் சதக்கத்துல்லா உள்பட மாநில நிர்வாகிகள் மாநாட்டை வெற்றிகரமாக நடத்த பிரமாண்ட ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
இதில் தென்சென்னை கிழக்கு மாவட்டத்தில் இருந்து சுமார் 50 ஆயிரம் வணிகர்கள் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மே 5-ந்தேதி கடைகள்- நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்து வியாபாரிகள் குடும்பத்துடன் மாநாட்டில் பங்கேற்பார்கள்.
மாநிலத் தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா கரத்தை வலுப்படுத்தும் வகையில் தென்சென்னை கிழக்கு மாவட்டத்தில் இருந்து ஏராளமானோர் கொடி ஏந்தி மாநாட்டில் பங்கேற்பார்கள்.
அகில இந்திய தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மாநாட்டுக்கு வருவதால் அவர்களை சிறப்பிக்கும் வகையில் தென்சென்னை கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் அலைகடலென மாநாட்டில் பங்கேற்பார்கள்.
இவ்வாறு என்.டி.மோகன் கூறினார்.