புதுவையில் பெண் சரமாரி குத்திக்கொலை- தொழிலாளி வெறிச்செயல்
புதுச்சேரி:
புதுவை குமரகுரு பள்ளத்தை சேர்ந்தவர் கீதா (வயது 35). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கீதாவை விட்டு அவரது கணவர் ராஜு பிரிந்து சென்று விட்டார். இதையடுத்து கீதா தனது குழந்தைகளுடன் சாரம் ஜெயராம் நகர் அவ்வை வீதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இதற்கிடையே கீதாவுக்கும், தட்டு வண்டி தொழிலாளியான சடை ஆனந்த் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் ஒன்றாக குடும்பம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் இன்று மதியம் 1.00 மணி அளவில் இவர்கள் இருவருக்கும் இடையே வீட்டில் தகராறு ஏற்பட்டது.
அப்போது வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த சடை ஆனந்த் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக கீதாவை குத்தினார். இதில், ரத்த வெள்ளத்தில் கீதா சாய்ந்தார். இதனை பார்த்ததும் சடை ஆனந்த் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
அக்கம் பக்கத்தினர் மற்றும் கீதாவின் உறவினர்கள் திரண்டு வந்து கீதாவை சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே கீதா பரிதாபமாக இறந்து போனார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் கோரிமேடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குபதிவு செய்து தப்பி ஓடிய சடை ஆனந்தை தேடி வருகிறார்கள்.
பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.