செய்திகள்

திருவல்லிக்கேணியில் திருநங்கையுடன் வசித்து வந்த வாலிபர் கத்தியால் குத்தி தற்கொலை

Published On 2019-04-27 09:04 GMT   |   Update On 2019-04-27 09:04 GMT
திருவல்லிக்கேணியில் திருநங்கையுடன் வசித்து வந்த வாலிபர் கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:

திருவல்லிகேணி பாம்பு நகரை சேர்ந்தவர் அஜித்குமார் (25). இவர் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மீன் மார்க்கெட்டில் மீன் வெட்டும் தொழில் செய்து வந்தார்.

அஜித்குமாருக்கு அதே பகுதியை சேர்ந்த ரதி என்ற திருநங்கையுடன் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் கடந்த 3 மாதங்களாக ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு 8.20 மணி அளவில் அஜித்குமார் கழுத்தில் கத்தி குத்து காயத்துடன், கஸ்துரிபா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக திருவல்லிக்கேணி போலீசுக்கு தகவல் கிடைத்தது.

இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதற்கிடையே அஜித்குமார் மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை 4.30 மணி அளவில் உயிரிழந்தார்.

இதுபற்றி அஜித்குமாரின் உறவினர்கள் போலீசில் அளித்த புகாரில் திருநங்கை ரதிதான் அஜித்குமாரை கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்ததாக தெரிவித்தனர். இது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

திருநங்கை ரதி வாலாஜாவை சேர்ந்தவர். விசாரணைக்காக ரதியின் செல்போனை போலீசார் தொடர்பு கொண்டனர்.

ஆனால் போலீசுக்கு பயந்து செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடிவருகிறார்கள். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் கூறும் போது, திருநங்கை ரதியுடன் ஏற்பட்ட பழக்கத்தால் அஜித்குமார் அவருடன் ஒன்றாக வாழ்ந்துள்ளார். 2 பேருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் அஜித்குமார் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது என்றனர். இருப்பினும் திருநங்கை ரதியை போலீசார் தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News