செய்திகள்

மதுக்கரை அருகே கஞ்சா வியாபாரி கொலை - 2 பேர் கைது

Published On 2019-04-26 13:57 GMT   |   Update On 2019-04-26 13:57 GMT
மதுக்கரை அருகே கஞ்சா வியாபாரி கொலையில் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை:

கோவை மதுக்கரை அருகே உள்ள அறிவொளி நகரை சேர்ந்தவர் அபுதாகீர்(வயது 43). கஞ்சா வியாபாரி.

சம்பவத்தன்று இரவு இவர் குனியமுத்தூர் ரெயின்போ காலனி பகுதியில் மயங்கி கிடந்தார். அவரது வாயில் ரத்தக் காயம் இருந்தது. இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் தெரி வித்தனர்.

உடனடியாக போலீசார் விரைந்து வந்து அபுதாகீரை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அபுதாகீர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் அபுதாகீரை இடையர்பாளையத்தை சேர்ந்த அராத்நிசார், அனந்த், கோபி என்கிற கோபிநாத், சுகுணாபுரத்தை சேர்ந்த பாவா, முஜிபூர் ரகுமான், ஜமீல், முகமது ஹூசைன் (40) ஆகியோர் சேர்ந்து கஞ்சா விற்பனைக்கு பிரிப்பதற்கு ஏற்பட்ட தகராறில் அடித்து கொலை செய்தது தெரிய வந்தது.

இந்த கொலை வழக்கில் தொடர்புடைய தலைமறைவாக இருந்த கோபிநாத், முகமது ஹூசைன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் 2 பேரையும் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அராத் நிசார், அனந்த், பாவா, முஜிபூர் ரகுமான், ஜமீல் ஆகியோரை வலை வீசி தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News