செய்திகள்

எட்டிமடை அருகே வடமாநில தொழிலாளியை கொலை செய்த வாலிபர் கைது

Published On 2019-04-23 11:58 GMT   |   Update On 2019-04-23 11:58 GMT
கோவை எட்டிமடை அருகே வடமாநில தொழிலாளியை கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:

மேற்கு வங்க மாநிலம் பீர் பாரா பகுதியை சேர்ந்தவர் சோரன் மார்க்கஸ் (வயது 24).

எர்ணாகுளத்தில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்த இவர் நேற்று கோவை எட்டிமடை பகுதியில் மரத்தில் பெல்ட்டால் தூக்கு போட்ட நிலையில் பிணமாக தொங்கினார்.

கே.ஜி. சாவடி போலீசார் சம்பவஇடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அவரது உடலில் ரத்தக் காயங்கள் இருந்தன. அவரை அடித்துக் கொலை செய்து பெல்ட்டால் கழுத்தை இறுக்கி தூக்கில் தொங்க விட்டது தெரிய வந்தது.

அவரது சட்டைப்பையில் இருந்த வாக்காளர் அடையாள அட்டை மூலம் இறந்தது சோரன் மார்க்கஸ் என்பதை உறுதி செய்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

இதில் சோரன் மார்க்கஸ் விடுமுறையில் சொந்த ஊர் சென்று விட்டு கடந்த 19-ந் தேதி ரெயிலில் கேரளாவுக்கு திரும்பியது தெரிய வந்தது. இதையடுத்து அவர் எட்டிமடை வரக்காரணம் என்ன? அவரை கொலை செய்தது யார்? என விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக அப்பகுதியை சேர்ந்த சிலரிடம் விசாரித்த போது நேற்று முன்தினம் இரவு சோரன் மார்க்கசுடன் கே.ஜி.சாவடி அருகே உள்ள சாவடிபுதூரை சேர்ந்த பிரபாகரன்(24) என்பவர் சாவடி சந்திப்பு பகுதியில் தகராறு செய்தது தெரிய வந்தது.

கூலி வேலை பார்த்து வரும் பிரபாகரன் மீது கே.ஜி. சாவடி போலீஸ் நிலையத்தில் ஒரு வழக்கு உள்ளது. அவரை போலீசார் மடக்கிப் பிடித்து விசாரித்த போது அவர், நான் சாவடி சந்திப்பில் நின்ற போது சோரன் மார்க்கஸ் அங்கு வந்ததாகவும், அவரிடம் குடிக்க பணம் கேட்ட போது தர மறுத்ததால் கல்லால் அவரது தலையில் தாக்கியதாகவும், இதில் சோரக் மார்க்கஸ் இறந்து விட்டதால் பெல்ட்டில் கட்டி மரத்தில் தொங்க விட்டதாக கூறினார். போலீசார் அவரை கைது செய்தனர்.

கொலை செய்யப்பட்ட சோரன் மார்க்கஸ் எர்ணாகுளத்துக்கு செல்லும் வழியில் எட்டிமடையில் இறங்கியது ஏன்? என தெரியவில்லை. சோரன் மார்க்கசின் உறவினர்களுக்கு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் வந்ததும் உடல் பிரேதபரிசோதனை செய்யப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
Tags:    

Similar News