செய்திகள்

பொம்மையார்பாளையத்தில் கார் மோதியதில் மாணவன் பலி

Published On 2019-04-18 16:39 GMT   |   Update On 2019-04-18 16:39 GMT
பொம்மையார்பாளையத்தில் கார் மோதியதில் 7ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான். பிறந்த நாளில் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.
சேதராப்பட்டு:

புதுவை அருகே தமிழக பகுதியான பொம்மையார் பாளையம் வெண்ணியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மகன் தருண் (வயது12). இவன் புதுவையில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் தருணுக்கு பிறந்த நாளாகும். அன்று காலை பெற்றோருடன் பிறந்தநாளை கொண்டாடிய தருண் அன்று மாலை தனது மாமா திருமால் என்பவருடன் வெளியூருக்கு செல்ல பஸ்சுக்காக பொம்மையார் பாளையம் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தான்.

அப்போது புதுவையில் இருந்து மரக்காணம் நோக்கி சென்ற கார் எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மாணவன் தருண் மீது மோதிவிட்டு அருகில் உள்ள கோவிலை இடித்துவிட்டு நின்றது. இதில் படுகாயம் அடைந்த தருணை அருகில் இருந்த அவரது மாமா திருமால் மற்றும் அக்கம்பக்கத்தினர் மீட்டு பிம்ஸ் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மாணவன் பரிதாபமாக இறந்து போனான்.

திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு பகுதியை சேர்ந்தவர் மணி (வயது70). இவர் நாவற்குளத்தில் உள்ள மினரல் வாட்டர் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலைபார்த்து வந்தார். நேற்று காலை 6 மணிக்கு பணி முடித்துவிட்டு சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தார். 

திண்டிவனம்- புதுவை தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது திண்டிவனத்தில் இருந்து புதுவை நோக்கி வந்த கார் எதிர்பாரதவிதமாக மணி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த மணியை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி மணி பரிதாபமாக இறந்தார். 

இந்த 2 விபத்துகள் குறித்தும் ஆரோவில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
Tags:    

Similar News