செய்திகள்

பாகூரில் இருந்து கடலூருக்கு மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில் கடத்தியவர் கைது

Published On 2019-04-16 09:27 GMT   |   Update On 2019-04-16 09:27 GMT
பாகூரில் இருந்து கடலூருக்கு மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

பாகூர்:

பாராளுமன்ற தேர்தலையொட்டி பாகூரில் இருந்து தமிழக பகுதிகளுக்கு மதுப் பாட்டில்களை கடத்துவதை தடுக்க பாகூர் போலீசார் நேற்று இரவு தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர்.

அது போல் சோரியாங் குப்பம் பகுதியில் ரோந்து சென்ற போது மோட்டார் சைக்கிளில் ஒருவர் 4 அட்டை பெட்டிகளுடன் சென்று கொண்டிருந்ததை போலீசார் கண்டனர்.

இதையடுத்து அவரை போலீசார் தடுத்து நிறுத்தி அட்டை பெட்டிகளை திறந்து சோதனையிட்டனர். அப்போது 4 அட்டை பெட்டிகளிலும் 242 குவார்ட்டர் பிராந்தி பாட்டில்கள் இருந்தன.

இதையடுத்து அந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கடலூர் கேப்பர் மலை பகுதியை சேர்ந்த மாரியப்பன் (வயது 42) என்பதும், இவர் பாராளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு சப்ளை செய்ய மதுபாட்டில்களை கடத்தி சென்றதும் தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து மாரியப்பனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரிடம் இருந்த மதுப் பாட்டில்களை பறிமுதல் செய்து கலால்துறையிடம் ஒப்படைத்தனர்.

இதுபோல் பாகூர் போலீசார் ஆராய்ச்சிகுப்பம் பகுதியில் ரோந்து சென்ற போது ஒருவர் கையில் கட்டை பையுடன் சென்றார். அவரிடம் இருந்த கட்டை பையை வாங்கி பார்த்தனர். அதில், 52 குவார்ட்டர் பிராந்தி பாட்டில்கள் இருந்தன.

இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கீழ்பரிக்கல்பட்டை சேர்ந்த உதயகுமார் (வயது 32) என்றும், இவர் அதிக விலைக்கு விற்க மதுபாட்டில்களை கொண்டு சென்றதும் தெரிய வந்தது. உதயகுமாரை போலீசார் கைது செய்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News