மகன் பிறந்தநாளில் மனைவியுடன் தகராறு- கார் மெக்கானிக் தூக்குபோட்டு தற்கொலை
திருபுவனை:
திருபுவனை அருகே உள்ளது ஆண்டியார் பாளையம். இந்த பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 30). கார் மெக்கானிக். இவரது மனைவி வேல்விழி (24). இவர்களுக்கு சாதனாஸ்ரீ (3½) என்ற பெண் குழந்தையும், 2 வயதில் பிரசோத் என்ற மகனும் உள்ளனர்.
நேற்று மகன் பிரசோத்தின் பிறந்த நாளாகும். இதனையொட்டி பிறந்தநாள் விழாவை கொண்டாட மகேந்திரனும், வேல்விழியும் முடியு செய்தனர். ஆனால், பிறந்தநாள் விழா கொண்டாட பணம் இல்லாததால் கணவன்- மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது.
பின்பு வேல்விழி வெளியே சென்று விட்டார். அப்போது மகேந்திரன் வீட்டுக்குள் சென்று கதவை உள்புறமாக பூட்டிக்கொண்டார். சிறிது நேரம் கழித்து வேல்விழி வீட்டுக்கு வந்தார்.
அப்போது வீட்டின் கதவு உள்புறமாக பூட்டப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப்பார்த்த போது, கணவர் மகேந்திரன் மின் விசிறியில் சேலையால் தூக்கில் பிணமாக தொங்கு வதை பார்த்து கூச்சல் போட்டு அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர்.
பின்னர் அவர்கள் கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்து தூக்கில் பிணமாக தொங்கிய மகேந்திரன் உடலை கீழே இறக்கினர்.
இதுகுறித்து திருபுவனை போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்- இன்ஸ்பெக்டர் பிரியா, ஏட்டு ஜெயதேவன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.