செய்திகள்

புதுவையில் இருந்து தமிழகத்துக்கு மதுபாட்டில் கடத்த முயன்றவர் கைது

Published On 2019-04-10 10:05 GMT   |   Update On 2019-04-10 10:05 GMT
புதுவையில் இருந்து தமிழகத்துக்கு மது பாட்டில் கடத்த முயன்றவர் கைது செய்யப்பட்டார்.

புதுச்சேரி:

புதுவை பெரியகடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன், ஏட்டு ராமலிங்கம் மற்றும் போலீசார் நேற்று மாலையில் தம்புநாயக்கன் வீதியில் ரோந்து சென்றனர். போலீசாரை கண்டதும் ஒரு வாலிபர் 2 கட்டை பைகளை கீழே போட்டு விட்டு ஓடினார்.

சந்தேகம் அடைந்த போலீசார் அந்த பைகளை திறந்து பார்த்தபோது அதில் 50 மது பாட்டில்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்து கலால்துறையிடம் ஒப்படைத்தனர்.

இன்று காலை பெரியகடை போலீசார் நீடராஜப்பர் வீதி- பாரதி வீதி சந்திப்பில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு ஒருவர் பையுடன் நின்று கொண்டிருந்தார்.

போலீசார் அவரை பிடித்து பையை திறந்து பார்த்தனர். அதில், 43 மது பாட்டில்கள் இருந்தன. போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் திண்டிவனம் அருகே உள்ள ஆலகிராமத்தை சேர்ந்த தேவராஜ் (வயது 45) என்றும், இவர் புதுவையில் இருந்து தமிழகத்துக்கு மதுபாட்டில்களை கடத்த முயன்றதும் தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் தேவராஜை கைது செய்தனர். அவரிடம் இருந்த மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

Similar News