செய்திகள்

பழவேற்காட்டில் இருந்து ஆந்திராவுக்கு படகுகளில் ரே‌ஷன் அரிசி கடத்தல் - 2 பேர் கைது

Published On 2019-02-23 06:27 GMT   |   Update On 2019-02-23 06:27 GMT
பழவேற்காட்டில் இருந்து ஆந்திராவுக்கு படகுகளில் ரே‌ஷன் அரிசி கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொன்னேரி:

பொன்னேரி அருகே பழவேற்காடு பகுதியில் இருந்து ஆந்திராவிற்கு ரே‌ஷன் அரிசி நள்ளிரவில் படகு மூலம் கடத்துவதாக திருவள்ளூர் மாவட்ட குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத்துறை போலீசாருக்கு புகார்கள் வந்தன.

இதனையடுத்து இன்ஸ்பெக்டர் மைனர்சாமி, சப்-இன்ஸ்பெக்டர் ரகுபதி, ஏட்டுகள் துரைமுருகன், முத்துமாணிக்கம், சுரேஷ் கண்ணன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் கடந்த 2நாட்களாக பழவேற்காடு ஏரிப்பகுதி மற்றும் கடற்கரை பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்தனர். இந்த நிலையில் கூனங்குப்பம் பகுதியில் உள்ள படகுத்துறையில் 50 கிலோ எடை கொண்ட 200 ரே‌ஷன் அரிசி மூட்டைகளை 2 படகுகளில் ஏற்றி கொண்டு இருந்ததை போலீசார் பார்த்தனர். போலீசாரை பார்த்ததும் சிலர் தப்பி ஓடிவிட்டனர்.

இதனையடுத்து படகில் இருந்த ரே‌ஷன் அரிசி மூட்டைகளையும், 2 படகுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். படகில் இருந்த ஆந்திரா மாநிலம் தடாவை சேர்ந்த குமார், ரங்கநாதன் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

குறைந்த விலைக்கு பழவேற்காடு பகுதியில் ரே‌ஷன் அரிசியை அடிக்கடி வாங்குவதும் இதனை படகு மூலம் ஆந்திராவுக்கு கடத்தி அதிக விலைக்கு விற்பதாக தெரிவித்தனர். இதனை அடுத்து திருவள்ளூர் குடிமை பொருள் குற்ற புலனாய்வு துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

Tags:    

Similar News