செய்திகள்

திருப்பூரில் வீட்டுக்குள் புகுந்து கத்தி முனையில் நகை பறித்த 2 வாலிபர்கள் கைது

Published On 2019-02-22 12:25 GMT   |   Update On 2019-02-22 12:25 GMT
திருப்பூரில் வீட்டுக்குள் புகுந்து கத்தி முனையில் நகை பறித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர்:

திருப்பூர்-ஆண்டிபாளையம் சோதனை சாவடியில் போலீசார் வாகனசோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் அவர்களின் ஆவணங்களை சோதனையிட்டனர். அவர்களின் நடவடிக்கை குறித்து சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.

அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியை சேர்ந்த ஆஷிக்அலி (வயது 19) மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ரத்தினமுத்து (22) ஆகியோர் என்பது தெரியவந்தது.

இவர்கள் கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் 14-ந்தேதி திருப்பூர் மங்கலம் ரோடு ஜான் ஜோதி கார்டன் பகுதியை சேர்ந்த கோகுலகிருஷ்ணன் (52) என்பவரின் வீட்டில் புகுந்து, அவருடைய கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவர் அணிந்திருந்த 2½ பவுன் நகையை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்ற வழக்கில் தொடர்புடையவர்கள் என்பது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 2½ பவுன் நகையையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News