செய்திகள்
தி.மு.க. தொகுதி பங்கீடு குழுவுடன் மார்க்சிஸ்டு கட்சி தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்திய போது எடுத்த படம்.

தொகுதி பங்கீடு- மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியுடன் திமுக முதற்கட்ட பேச்சுவார்த்தை நிறைவு

Published On 2019-02-21 06:20 GMT   |   Update On 2019-02-21 07:00 GMT
பாராளுமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக, சென்னை அண்ணா அறிவாலயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியுடன் இன்று தி.மு.க. முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. #LSPolls #DMKAlliance
சென்னை:

பாராளுமன்றத் தேர்தலுக்காக தி.மு.க. அமைத்துள்ள கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

தி.மு.க.வுடன் காங்கிரஸ் கட்சி நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து 10 தொகுதிகள் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.

அடுத்த கட்டமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியுடன் இன்று தி.மு.க. பேச்சுவார்த்தை நடத்தியது. இதற்காக சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு இன்று காலை 10.30 மணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ. சவுந்தரராஜன், மத்திய குழு உறுப்பினர் சம்பத் ஆகியோர் வந்தனர்.

இவர்களை தி.மு.க. தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி முருகன், துறைமுகம் காஜா ஆகியோர் வரவேற்று அழைத்து சென்றனர்.

அறிவாலயத்தில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை குழுவில் இடம்பெற்றுள்ள தி.மு.க. பொருளாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி, முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு, கே.என்.நேரு ஆகியோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.



இந்த பேச்சுவார்த்தையின்போது, திருப்பூர், கன்னியாகுமரி தொகுதிகளில் போட்டியிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு விரும்புவதாக தெரிவித்தனர். இந்த தொகுதியை ஒதுக்க முடியாவிட்டால் மதுரை, கோவை தொகுதிகளை ஒதுக்குமாறு கோரிக்கை வைத்தனர். இந்த முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்ததும் வெளியே வந்த மார்க்சிஸ்ட்  மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இன்று நடந்த முதற்கட்ட பேச்சுவார்த்தை திருப்தியாக இருந்ததாகவும், மற்ற கூட்டணி கட்சிகளுடன் கலந்து பேசிவிட்டு, தங்களுக்கு உரிய தொகுதிகளை திமுக தலைமை அறிவிக்கும் என்றும் கூறினார்.

இன்று பிற்பகல் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அறிவாலயம் வந்து கூட்டணி பேச்சு நடத்துகிறார். மாலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் அறிவாலயம் வந்து தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அறிவாலய நிர்வாகிகள் தெரிவித்தனர். #LSPolls #DMKAlliance
Tags:    

Similar News