செய்திகள்

தமிழக மீனவர்கள் 200 பேர் ஆந்திராவில் சிறைபிடிப்பு - அமைச்சர், அதிகாரிகள் பேச்சுவார்த்தை

Published On 2019-02-20 03:19 GMT   |   Update On 2019-02-20 03:19 GMT
ஆந்திர கடலோரத்தில் மீன்பிடித்த 200 தமிழக மீனவர்களை ஆந்திர மீனவர்கள் சிறைப்பிடித்துள்ளனர். அவர்களை விடுவிக்கக்கோரி அரசு சார்பில் அமைச்சர், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். #TNfishermen
திருவொற்றியூர்:

ஆந்திர கடற்பகுதியில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள், அதிக குதிரைத்திறன் கொண்ட என்ஜின் பொருத்தப்பட்ட படகுகளை பயன்படுத்துவதாகவும், ஆந்திர மீனவர்களின் வலைகளை சேதப்படுத்தி விடுவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆந்திர மாநில கடல் பகுதிக்கு கடந்த 16-ந் தேதி மீன்பிடிக்க சென்ற 27 விசைப்படகுகளையும், அதில் இருந்த 200 மீனவர்களையும் ஆந்திர மீனவர்கள் சிறை பிடித்தனர்.

சிறைபிடிக்கப்பட்ட அனைத்து மீனவர்களும், நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணாபுரம், துப்பிலிபாலம், மைப்பாடு உள்ளிட்ட 20 மீனவ கிராமங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

சிறைபிடிக்கப்பட்ட சென்னை மீனவர்களை விடுவிப்பதற்காக மீனவ சங்க நிர்வாகிகள் ஆந்திரா சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் தமிழக மீனவர்களை விடுவிக்க மறுத்துவிட்டனர். இந்த நிலையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ஆந்திர மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனையும் அவர்கள் ஏற்கவில்லை.

மேலும் தமிழக மீனவர்கள், ஆந்திர கடற்கரையோரம் மீன்பிடி தொழிலை மேற்கொள்ளக்கூடாது. அதிக குதிரை திறன்கொண்ட என்ஜின், இரட்டை மடி வலைகளை பயன்படுத்தக்கூடாது. 300 அடி தூரத்தில், ஆழ்கடலில் மட்டுமே மீன்பிடிக்க வேண்டும். இந்த கோரிக்கையை தமிழக அரசு ஏற்கும் வரை, மீனவர்களை விடு விக்க மாட்டோம் என்று ஆந்திர மீனவர்கள் கூறிவிட்டனர்.

இந்த நிலையில், சென்னை மாவட்ட மீன்வளத்துறை இணை இயக்குனர் இளம்பரிதி, உதவி இயக்குனர் வேலன் தலைமையில் தமிழக அதிகாரிகள், ஆந்திர மாநில மீன்வளத்துறை அதிகாரிகளிடம் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் ஆந்திர மீனவர்களின் கோரிக்கைகளை ஏற்பதாகவும், சென்னை மீனவர்கள் விதிகளை மீறி மீன் பிடித்தொழில் மேற்கொண்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சமரசம் பேசினர். அதன்பின்னரும் தமிழக மீனவர்களை விடுவிக்காமல் ஆந்திர மீனவர்கள் பிடிவாதம் பிடித்து வருகின்றனர். இதனால் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. #TNfishermen

Tags:    

Similar News