செய்திகள்
புயல் நிவாரணம் வழங்க கோரி அனைத்து கட்சியினர் சாலை மறியல்- 97 பேர் கைது
கறம்பக்குடி அருகே கஜா புயல் நிவாரணம் வழங்க கோரி அனைத்து கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 97 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை தாலுகா, கறம்பக்குடி அருகேயுள்ள துவார் ஊராட்சியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட 250க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இன்னும் நிவாரணப் பொருள் வழங்கப்படவில்லை. இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் செய்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனை கண்டித்து அனைத்து கட்சிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் துவார் கடைவீதியில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
தி.மு.க. ஊராட்சி செயலாளர் தங்கமுத்து, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்த ராஜன்,தமிழ் மாநில காங்கிரஸ் விவசாய அணி செயலாளர் ரெங்கராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் உடையப்பன், துரைச்சந்திரன், தெற்கு ஒன்றிய செயலாளர் பால சுந்தரமூர்த்தி, தே.மு.தி.க. ,ஒன்றியக்குழு டைலர் ரெங்கராஜ், ம.தி.மு.க. மருதமுத்து, அ.ம.மு.க. ரெங்கராஜ் மற்றும் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
சாலை மறியலால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 63 பெண்கள் உள்பட 97 பேரை ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் வைத்தியநாதன், கறம்பக்குடி சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி ஆகியோர் கைது செய்து, மழையூர் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.