சேலத்தில் உதவித்தொகை பெற்று தருவதாக கூறி மூதாட்டியிடம் மோசடி செய்த மர்ம நபர்
சேலம்:
சேலம் காந்திஸ்டேடியம் அருகே வசித்து வருபவர் மாரிமுத்து (85). இவரது மனைவி பாப்பாத்தி (75). இவர்களது வீட்டிற்கு இன்று காலை மர்மநபர் ஒருவர் சென்றார்.
பின்னர் அங்கிருந்த பாப்பாத்தியிடம் நடக்க முடியாமல் உள்ள உனது கணவர் மாரிமுத்துக்கு அரசு உதவி தொகை பெற்று தருகிறேன், 3 ஆயிரம் ரூபாய் கொடுங்கள் என்று கூறினார்.
இதனை நம்பிய பாப்பாத்தி தற்போது 800 ரூபாய் தான் என்னிடம் உள்ளது என்றார். உடனே அந்த மர்ம நபர் 800 ரூபாயையும், சான்றிதழ்களையும் ஜெராக்ஸ் எடுத்து கொடுங்கள், செக் வாங்கியதும் மீதி பணத்தை கொடுங்கள்,
தற்போது என்னுடன் வாருங்கள் என்று ஆட்டோவில் அழைத்து சென்றார். பின்னர் நாட்டாண்மை கட்டிடம் முன்பு மூதாட்டியை இறக்கி விட்டு விட்டு தலைமறைவாகி விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கதறிய படி அந்த பகுதியில் நின்றது பார்க்க பரிதாபமாக இருந்தது.
இது குறித்து டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.