செய்திகள்

விருதுநகரில் குடியரசு தினவிழா - 90 பயனாளிகளுக்கு ரூ.9¾ லட்சம் நல உதவிகள்

Published On 2019-01-26 14:46 GMT   |   Update On 2019-01-26 14:46 GMT
குடியரசு தின விழாவில் 90 பயனாளிகளுக்கு ரூ.9¾ லட்சம் மதிப்பிலான நல உதவிகளை கலெக்டர் சிவஞானம் வழங்கினார். #RepublicDay
விருதுநகர்:

விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில், 70-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்பட்டது. மாவட்ட கலெக்டர் சிவஞானம் கொடியேற்றினார்.

பின்னர் போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜனுடன் திறந்த ஜீப்பில் சென்று போலீஸ் அணிவகுப்பை ஏற்றுக் கொண்டார்.

தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு கலெக்டர் சிவஞானம் பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். விருதுநகர் தனிப்பிரிவு ஏட்டு கண்ணன் உள்பட 114 காவலர்களுக்கு முதல்-அமைச்சர் பதக்கங்களை கலெக்டர் சிவஞானம் வழங்கினார். 70 காவலர்களுக்கு நற்சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இதே போல் சிறப்பாக பணியாற்றிய 102 அரசு ஊழியர்களுக்கு நற்சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. தொடர்ந்து 90 பயனாளிகளுக்கு ரூ.9¾ லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சிவஞானம் வழங்கினார்.

முன்னதாக விழாவுக்கு வந்த கலெக்டரை, மாவட்ட வருவாய் அலுவலர் உதயகுமார், போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன், மக்கள் தொடர்பு அலுவலர் ஜெகவீரபாண்டியன் ஆகியோர் வரவேற்றனர்.

விழாவில் பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

தேசபந்து திடலில் உள்ள தியாகிகள் நினைவுத்தூணில் கொடியேற்றி குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. விருதுநகர் மாவட்ட கோர்ட்டில் கூடுதல் நீதிபதி பரிமளா கொடியேற்றினார். இதில் நீதிபதிகள், வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளிலும் குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டன. #tamilnews
Tags:    

Similar News