செய்திகள்
2வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஒரு மாயமான் காட்சி - ஸ்டாலின்
இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஒரு ‘மாயமான் காட்சி’ என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #GIM2019 #DMK #MKStalin
சென்னை:
2வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கியது.
இருநாட்கள் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் நிறைவு விழா நிகழ்ச்சியில் பேசிய முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உலக முதலீட்டாளர்கள் மாநாடு மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. முதலீட்டாளர்கள் காட்டிய ஆர்வத்தால் 3 லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன என தெரிவித்தார்.
இந்நிலையில், இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஒரு ‘மாயமான் காட்சி’ என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஒரு ‘மாயமான் காட்சி’ என்பது மட்டுமே உண்மை. விளம்பரம் செய்து அரசின் பணத்தை வீணடித்தது தான் மாநாட்டின் முக்கிய சாதனை.
முதலீட்டாளர்கள் மாநாட்டிற்காக உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கு அமைச்சர்கள் உல்லாசப் பயணம் மேற்கொண்டனர்.
அந்நிய முதலீடுகள் குறைந்து, முதல் 10 இடங்களுக்குள் தமிழகம் வர முடியவில்லை. நாட்டிற்குள் வந்த அந்நிய முதலீடுகளில் தமிழகம் பெற்றது 0.79% மட்டுமே.
முதல் மாநாட்டில் போடப்பட்ட ஒப்பந்தங்களில் 25 சதவீதத்தைக்கூட அரசால் நிறைவேற்ற முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார். #GIM2019 #DMK #MKStalin