செய்திகள்

நாமக்கல் நகராட்சி குப்பை கிடங்கில் மீண்டும் தீ விபத்து

Published On 2019-01-22 17:52 GMT   |   Update On 2019-01-22 17:52 GMT
நாமக்கல் நகராட்சி குப்பை கிடங்கின் மற்றொரு பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
நாமக்கல்:

நாமக்கல் நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு கொசவம்பட்டி பகுதியில் உள்ளது. இங்கு தினசரி நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் அங்கு குப்பைகள் மலைபோல் தேங்கி உள்ளது.

இந்த நிலையில் கடந்த 15-ந் தேதி இந்த குப்பை கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயால் அப்பகுதி புகைமண்டலமாக காட்சி அளித்தது. இதனால் அன்னை சத்யாநகர், ரோஜாநகர், கங்காநகர், மாருதிநகர், கொசவம்பட்டி பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். இந்த தீயை 3 நாட்கள் போராடி நாமக்கல் தீயணைப்பு துறையினர் அணைத்தனர்.

இதற்கிடையே நேற்று பிற்பகல் மீண்டும் குப்பை கிடங்கின் மற்றொரு பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் அங்கு நிலைய அலுவலர் பொன்னுசாமி தலைமையில் விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் முயற்சியால் மக்கும் குப்பைகளில் இருந்து மண்புழு உரம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நவீன எந்திரங்கள் லேசான சேதங்களுடன் தப்பின. இருப்பினும் அப்பகுதியில் புகைமூட்டம் காணப்படுவதால் அங்கு குடியிருக்கும் பொதுமக்கள் மற்றும் அவ்வழியாக இருசக்கர வாகனங்களில் செல்வோர் கடும் அவதி அடைந்து வருகின்றனர். 
Tags:    

Similar News