சாலை தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி கல்லூரி மாணவர் பலி
போரூர்:
சென்னை எம்.ஜி.ஆர். நகர் சூளை பள்ளம் ஆவுடையப்பன் தெருவைச் சேர்ந்தவர் பரமசிவம். இவரது மகன் மணிகண்டன் (வயது 19) தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று இரவு அவர் அதே பகுதி பாரதியார் 1-வது தெருவைச் சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் மாணவன் பாலகணேசுடன் (15) அருகில் உள்ள ஓட்டலில் டிபன் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார்.
எம்.ஜி.ஆர். நகர், அண்ணா மெயின் ரோடு அழகிரிசாமி சாலை சந்திப்பில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் திடீரென சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதியது.
இதில் தலையில் படுகாய மடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். படுகாயமடைந்த பாலகணேஷ் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கிண்டி போக்குவரத்து பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.