செய்திகள்

அ.தி.மு.க. அனைவருக்கும் பாதுகாப்பு இயக்கம்- அமைச்சர் மணிகண்டன் பேச்சு

Published On 2019-01-18 15:08 GMT   |   Update On 2019-01-18 15:08 GMT
அ.தி.மு.க. அனைவருக்கும் பாதுகாப்பு இயக்கம் என்பதை மாற்று கட்சியில் இருந்து வரும் சகோதரர்கள் அறிந்து கொண்டனர் என்று அமைச்சர் மணிகண்டன் பேசினார்.

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டம் செம்படையார் குளம், பெருங்குளம்,வட்டான் வலசை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த அ.ம.மு.க. நிர்வாகிகள் ஏராளமானோர் பெருங்குளம் ஊராட்சி அ.தி.மு.க. செயலாளர் ஜானகிராமன் ஏற்பாட்டில் அமைச்சர் மணிகண்டன் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர். அவர்களை அமைச்சர் மணிகண்டன் வரவேற்று சால்வை அணிவித்து அ.தி,மு.க வேட்டிகளை பொங்கல் பரிசாக வழங்கினார்.

ராமநாதபுரம் மாவட்டம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆட்சிக் காலத்திலிருந்து அ.தி.மு.க. கோட்டையாக உள்ளது. அவர் உருவாக்கிய அ.தி.மு.க.வையும் அம்மா கட்டிக்காத்த இந்த பேரியக்கத்தையும் விட்டு உண்மை தொண்டர்கள் யாரும் எந்த மாற்றுக் கட்சிக்கும் செல்லவில்லை.

அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் அ.தி.மு.க. இயக்கத்தில்தான் பயணித்துக் கொண்டிருக்கின்றனர்.

நமது இயக்கத்தை விட்டு அங்கு சென்றவர்கள் இது ரவுடிகளின் கூடாரம் என்பதை தெளிவாக புரிந்து கொண்டு அண்ணா தி.மு.க.வில் இணைந்து வரும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.

அண்ணா தி.மு.க. அனைவருக்கும் பாதுகாப்பு இயக்கம் என்பதை மாற்று கட்சியில் இருந்து வரும் சகோதரர்கள் அறிந்து கொண்டனர். இணையும் நிர்வாகிகள் அனைவருக்கும் நல்ல எதிர்காலம் உண்டு. ராமநாதபுரத்தில் மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் இதுவரை சுமார் 6 ஆயிரம் பேர் அ.தி.மு.க.வில் இணைந்து உள்ளனர்.

ஏழை விவசாயி மகனாக பிறந்து இன்று தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று அம்மாவின் வழியில் ஆட்சி செலுத்திக் கொண்டிருக்கும் தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி தாலிக்கு தங்கம், பொங்கல் பரிசு ரூபாய் 1,000 என வழங்கியுள்ளார்.

அவரது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் மு.க.ஸ்டாலின் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். முதல்வர் பதவி ஆசையில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இது போன்று கூறி வருகிறார். இதை மக்கள் நம்பத் தயாராக இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News