செய்திகள்

திண்டுக்கல்லில் ஏ.டி.எம்.மில் கொள்ளையடிக்க முயன்ற 2 பேர் கைது

Published On 2019-01-16 11:11 GMT   |   Update On 2019-01-16 11:11 GMT
திண்டுக்கல்லில் அடகு கடை மற்றும் ஏ.டி.எம். மையங்களில் கொள்ளையடிக்க முயன்ற 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் வேடப்பட்டியில் அடகு கடை மற்றும் ஏ.டி.எம். மையங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 2 வாலிபர்கள் கொள்ளையடிக்க முயன்றனர். ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்தபோது சத்தம் கேட்டு வீட்டின் உரிமையாளர் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஒன்று கூடியதால் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றனர்.

இது குறித்து நகர் தெற்கு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் நகர் தெற்கு இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் ஷேக் தாவூத் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர்.

சுடுகாடு அருகே மோட்டார் சைக்கிளில் 2 பேர் சந்தேகத்துக்கு இடமாக வந்துள்ளனர். போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர். அவர்களை விரட்டி பிடித்த போலீசார் விசாரித்ததில் 2 பேரும் ஏ.டி.எம். மையம் மற்றும் அடகு கடையில் கொள்ளையடிக்க முயன்றவர்கள் என்பது தெரிய வந்தது.

அந்த வாலிபர்கள் யாகப்பன்பட்டியைச் சேர்ந்த கார்த்திகேயன் (வயது 20), வேடப்பட்டியைச் சேர்ந்த ஆரோக்கியதீபக் (17) என்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர். அவர்களை கைது செய்து வேறு ஏதும் கொள்ளை சம்பவங்களில் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News