செய்திகள்

கிறித்துவ தேவாலயங்களை சீரமைக்க நிதிஉதவி பெற விண்ணப்பிக்கலாம்- கலெக்டர் தகவல்

Published On 2019-01-14 15:55 GMT   |   Update On 2019-01-14 15:55 GMT
கிறித்துவ தேவாலயங்களை சீரமைக்க நிதிஉதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–

தமிழ்நாட்டில் சொந்தக் கட்டிடங்களில் இயங்கும் கிறித்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு நடப்பாண்டிற்கு (2018–19) நிதி உதவி வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறுவதற்கு கிறித்துவ தேவாலயம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்டிடத்தில் இயங்கி இருத்தல் வேண்டும். தேவாலயம் கட்டப்பட்ட இடம் பதிவுத்துறையில் பதிவு செய்திருத்தல் வேண்டும். தேவாலயத்தின் பெயரில் தேவாலயம் பதிவு செய்திருக்க வேண்டும். தேவாலயத்தினை சீரமைப்பு பணிக்காக வெளி நாட்டில் இருந்து எவ்வித நிதி உதவியும் பெற்றிருத்தல் கூடாது. சீரமைப்பு பணிக்காக ஒரு முறை நிதி உதவி அளிக்கப்பட்ட தேவாலயத்திற்கு மறுமுறை நிதி உதவி 5 ஆண்டுகளுக்கு பின்னர் வழங்கப்படும். பழமையான தேவாலயங்கள் பழுது மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு நிதியுதவியாக 10 முதல் 15 வருடங்கள் வரை ரூ.1 லட்சமும், 15 முதல் 20 வருடங்கள் வரை ரூ.2 லட்சமும், 20 வருடங்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட பழமையான தேவாலயங்களுக்கு ரூ.3 லட்சம் வழங்கப்படுகிறது.

விண்ணப்ப படிவத்தை அனைத்து உரிய ஆவணங்களுடன் பெரம்பலூர் மாவட்ட கலெக்டருக்கு விண்ணப்பிக்க வேண்டும். 

மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழு, அவ்விண்ணப்பங்களை அனைத்து உரிய ஆவணங்களுடன் பரிசீலித்து, கிறித்துவ தேவாலயங்களை ஸ்தல ஆய்வு மேற்கொண்டு, கட்டிடத்தின் வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து, உரிய முன்மொழிவுகளுடன் சிறுபான்மையினர் நல ஆணையருக்கு நிதி உதவி வேண்டி பரிந்துரை செய்து அனுப்பப்படும். நிதி உதவி இரு தவணைகளாக தேவாலயத்தின் வங்கிக் கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும்.

இத்திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறுவதற்கு உரிய காலத்தில் விண்ணப்பித்து பயனடையலாம்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
Tags:    

Similar News