செய்திகள்
மீஞ்சூர் அருகே மண்புழு வளர்ப்பு மையத்துக்கு தீ வைத்த மர்ம கும்பல்
மீஞ்சூர் அருகே மண்புழு வளர்ப்பு மையத்துக்கு மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம் விவசாயிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பொன்னேரி:
மீஞ்சூரை அடுத்த பெரிய முல்லைவாயில், எட்டியம்மன் கோவில் தெருவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் மண்புழு வளர்ப்பு மையம் உள்ளது.
இங்கு வளர்க்கப்படும் மண்புழுக்கள் மீஞ்சூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த மையம் சிறிய கொட்டகை அமைத்து செயல்பட்டு வந்தது.
இந்த நிலையில் இன்று காலை மண்புழு வளர்ப்பு மையத்தின் மேற்கூரை திடீரென தீப்பற்றி எரிந்தது. சிறிது நேரத்தில் கொட்டகை முழுவதும் எரிந்து சாம்பலானது.
மர்ம நபர்கள் தீ வைத்து தப்பி இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. இது குறித்து மீஞ்சூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.