ஊத்துக்கோட்டை அருகே விபத்து - பெண் பலி
ஊத்துக்கோட்டை:
திருவள்ளூரிலிருந்து ஊத்துக்கோட்டை நோக்கி கடந்த 4-ந் தேதி ஆட்டோ ஒன்று புறப்பட்டு சென்றது.
சீதஞ்சேரி அருகே உள்ள ஆலபாக்கம் கிராமத்தை சேர்ந்த டிரைவர் நரேஷ் ஆட்டோவை ஓட்டினார். இதில் ஒதப்பை கிராமத்தை சேர்ந்த செல்லப்பன் என்பவரது மனைவி காட்டம்மாள் (45) உள்பட 10-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.
ஊத்துக்கோட்டை அருகே ஒதப்பை பகுதியில் வந்த போது திருவள்ளூர் நோக்கி சென்ற கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த ஆட்டோ மீது மோதி கவிழ்ந்தது.
இதே போல் கார் மோதிய வேகத்தில் ஆட்டோவும் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் டிரைவர் நரேஷ், ஆட்டோவில் இருந்த காட்டம்மாள், நதியா, இவரது மகள் ஹர்ஷவர்தினி, தாஸ், நாகசுந்தரி உள்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர். காரில் பயணம் செய்த 2 பேரும் காயம் அடைந்தனர்.
பென்னாலூர்பேட்டை போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
காட்டம்மாளை மேல் சிகிச்சைக்கு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி காட்டம்மாள் நேற்று பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பென்னாலூர்பேட்டை இன்ஸ்பெக்டர் பாலு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.