செய்திகள்

செம்பனார்கோவில் அருகே தீ விபத்து: 4 கடைகள் எரிந்து நாசம்

Published On 2019-01-12 14:21 GMT   |   Update On 2019-01-12 14:21 GMT
செம்பனார்கோவில் அருகே ஏற்பட்ட தீ விபத்தில் 4 கடைகள் எரிந்து நாசமடைந்தன. இதில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.
பொறையாறு:

நாகை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே வடகரை மெயின்ரோட்டில் தியாகராஜன் என்பவர் கவரிங் நகை கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு அருகில் முனவர் சுல்தான் என்பவர் காய்- கனி கடையும், வேலு என்பவர் பாணிபூரி கடையும், முசாகுதீன் என்பவர் டீக் கடையும் நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் மேற்கண்ட 4 கடைகளையும் அதன் உரிமையாளர்கள் பூட்டிவிட்டு சென்றனர். நேற்று அதிகாலை 4 மணி அளவில் அந்த கடைகளில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

இது குறித்து தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. தீ விபத்து குறித்து மயிலாடுதுறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து மயிலாடுதுறை தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர். ஆனால், 4 கடைகளும் எரிந்து நாசமடைந்தன. இதில் தியாகராஜன், பொங்கல் பண்டிகை விற்பனையை முன்னிட்டு கடையில் ரூ.2 லட்சம் மதிப்பில் கவரிங், வெள்ளி பொருட்களை கொள்முதல் செய்து வைத்து இருந்தார். இவை அனைத்தும் தீயில் கருகி சாம்பலானதால் தியாகராஜன் கதறி அழுதார். இதைப்போல டீக் கடை, பாணிபூரி கடை, காய்-கனி கடை ஆகிய கடைகளில் இருந்த பொருட்களும் எரிந்து சேதமடைந்தன. 4 கடைகளிலும் தீயில் கருகிய பொருட்களின் மதிப்பு ரூ.5 லட்சம் என கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்த பொறையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் போலீசார் பார்த்தனர். 
Tags:    

Similar News